இதெல்லாம் படிச்சிட்டீங்களா?

சிவாஜியின் கதை-3

நன்றி : தமிழ்விக்கி

சிவாஜி ராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த், 12 டிசம்பர் 1950 அன்று இந்தியாவின் கர்நாடகத்தில் ராமோஜி ராவ் கெய்க்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாக பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான போது தன் தாயை இழந்தார். பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், ஒரு நண்பரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த மூன்று முடிச்சு (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது. தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமய புனிதரான ராகவேந்திரரின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டு வெளிவநத்த பாபா வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவருடைய நண்பரும், மற்றொரு சிறந்த நடிகருமான கமலஹாசன் பெரும்பாலும் அவருடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்கையில் ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாகவே உள்ளன. தமிழ் மொழியிலும், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழிகளிலும் 170 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் மாபெரும் வரவேற்பு கிடைக்கிறது. அவருடைய திரைப்படங்கள் தயாரிப்பாளர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும் நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுக்கிறது. ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இது தவிர அவருக்கு ஜப்பானிலும் பல ரசிகர்கள் உள்ளனர். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கின்றனர்.

ஆன்மீக ஈடுபாடு

ரஜினிகாந்த் ஒரு ஆன்மீகவாதி ஆவார். சிறு வயது முதல் ராகவேந்திரர், ராமகிருஷ்ணர் போன்றோரின் போதனைகளை பின்பற்றி வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் அடிக்கடி இமய மலையில் உள்ள ரிஷிகேஷ் போன்ற இடங்களுக்கு சென்று ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அரசியல் தொடர்பு

1990களில் ரஜினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்றதன் காரணங்களுள் ஒன்றாக கூறப்படுகிறது. எனினும், இக்காரணி தேர்தல் புள்ளியியலாளர்களால் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில், ரஜினிகாந்த் எக்கட்சிக்கும் வாக்களியுங்கள் என்றோ வாக்களிக்க வேண்டாம் என்றோ வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தன் ரசிகர்களையோ பொது மக்களையோ கேட்டுக்கொள்ளவில்லை. 2004 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே இருந்து வருகிறார்.

நான் எப்போ வருவேன்... எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது...எப்போ வரணுமோ அப்போ கரெக்டா வருவேன். என்ற வசனத்தை நம்பி இவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்

குடும்பம்

16 பிப்ரவரி 1981 அன்று இவர் லதாவை மணந்தார். அவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா ஆகிய இரு மகள்கள். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா, 2004 ஆம் ஆண்டு இளம் தமிழ் திரைப்பட நடிகரான தனுஷை மணந்தார். இளைய மகள் சௌந்தர்யா திரைப்பட அனிமேஷன் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

இதுவே ரஜினிகாந்த் என்னும் சிவாஜி(ராவ்)யின் கதை.

No comments: